சீனப் பழமொழிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(சீனப் பழமொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இது சீனாவில் பயன்படுத்தப்படும் பழமொழிகளின் பட்டியலைக் கொண்ட மேற்கோள் தொகுப்பு.

  • அதிக உபசாரம் அபசாரத்திற்கு அறிகுறி.
  • அதிருஷ்டமுள்ளவன் ஒரு நண்பனைச் சந்திக்கிறான், அதிருஷ்டம் கெட்டவன் ஓர் அழகியைச் சந்திக்கிறான்.
  • அழகில்லாத மனைவியரும், அறிவில்லாத வேலைக்காரிகளும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்.
  • ஆண்பிள்ளையின் சொற்கள் அம்பு போன்றவை; பெண் பிள்ளையின் சொற்கள் ஒடிந்த விசிறி போன்றவை.
  • இதயத்தில் பெருந்தன்மை இருந்தால் , அது, நற்பண்புகளை அழகாக பிரகாசிக்கும்.
  • இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய் நாட்டின் சட்டத்தை மதிக்க தூண்டும்.
  • இளமங்கையை வீட்டில் புலிபோல் காத்துவர வேண்டும்.
  • உங்கள் குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு எப்பொழுதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள்.
  • உடலைக் குணப்படுத்தலாம், மனதைக் குணப்படுத்த முடியாது.
  • உடன் பிறந்தார்கள் ஒத்து வேலை செய்தால், மலைகளெல்லாம் பொன்னாகும்.
  • உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம்.
  • உன் பையனிடம் உனக்கு அன்பிருந்தால், அவனை அடித்து வளர்க்கவும்; வெறுப்பிருந்தால், தின்பண்டங்களை வாங்கி (அவன் வாயில்) திணிக்கவும்.
  • ஐந்து பெண் குழந்தைகளுள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை.
    (குடும்பத்தின் சொத்து விரைவிலே தீர்ந்து விடும்.)
  • ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக்கொள்.
  • ஒரே கழியைக் கொண்டு எப்படி வீடு கட்ட முடியும்?
  • ஒரே மனைவியிருந்தால், வீட்டில் சண்டைஇராது.
  • ஒற்றைத் திறவுகோல் கிலுகிலுக்காது.
  • ஒன்றும் தெரியாத வைத்தியன் கொலைகாரனைத் தவிர வேறில்லை.
  • கட்டிலிலே கணவனும் மனைவியும், வெளியிலே அவர்கள் விருந்தினர்கள்.
  • கணவன் மனைவி சண்டை ஓர் இரவோடு சரி.
  • காதலுக்கும் தொழு நோய்க்கும் தப்புவோர் சிலரே.
  • குருட்டுப் பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும்.
  • கைகளும் கால்களும் போன்றவர்கள் சகோதரர்கள்.
  • குழந்தையில்லாத செல்வன் சீமானல்லன்; செல்வமில்லாது குழந்தைகளை மட்டும் பெற்றவன் ஏழையுமல்லன்.
  • கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
  • சேவலுக்கு வாழ்க்கைப் பட்டால், அதன் பின்னேதான் செல்ல வேண்டும்.
  • தந்தைக்கு அடங்கி நடத்தல், கணவனுக்கு அடங்கி நடத்தல், மகனுக்கு அடங்கி நடத்தல்- இம்மூன்றுமே ஒரு பெண்ணுக்குரிய மூன்று பண்புகள்.
  • தந்தையின் கடன்களை மகன் செலுத்துகிறான்.
  • தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை அவனுடைய மௌனத்திற்கே அஞ்சுகிறான்.

தந்தையைக் குறை சொல்லும் பொழுது, மகன் தானே சிறுமையடைகிறான்.

  • தாய் நாட்டின் சட்டத்தை மதிப்பவர்களால் தான் உலகம் முழுவதிற்குமான சமாதானத்தை உருவாக்க முடியும்.
  • நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்.
  • நோய் வந்து விட்டால் எந்த வைத்தியரையாவது அழை.
  • பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது.
  • பதினைந்து ரூபாயில் ஒருவன் மனைவியைப் பெறலாம், ஆனால் ஒரு கோவேறு கழுதை வாங்க ஐம்பது ரூபாய் வேண்டும்.
  • பணக்காரர்கள் சீதனம் கொடுத்துப் பெண்களுக்கு மணம் செய்கிறார்கள்; மத்திய வகுப்பினர் பெண்களைக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள்.
  • பல்லக்கில் இருப்பவன் மனிதன், பல்லக்குத் தூக்குபவனும் மனிதன் தான்.
  • பழைய இஞ்சியில் காரம் அதிகம்.
  • பற்கள் விழுந்த பிறகு, நாவு மட்டும் ஆடிக்கொண்டே யிருக்கும்.
  • பிரியமுள்ள தந்தையரும் தாயாருமே உண்டு, பிரியமுள்ள பிள்ளைகளும் பெண்களும் இல்லை.
  • பிறத்தல் என்பது வெளியே வருதல், இறத்தல் என்பது திரும்பிச் செல்லல்.
  • பிறப்பதற்கு ஒரு நாளுண்டு, இறப்பதற்கும் ஒரு நேரமுண்டு.
  • புதிதாய்ப் பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்சமாட்டா.
  • பெண்ணின் உரோமத்தால் பெரிய யானையையும் கட்டிப் பிடிக்கலாம்.
  • பெண் பிறக்கும் பொழுது வெளியே பார்த்துக்கொண்டு வருகிறாள், பையன் பிறக்கும் பொழுது உள்ளே பார்த்துக் கொண்டு வருகிறான்.
  • மருந்து கொல்லுவதில்லை, வைத்தியரே கொல்லுகிறார்.
  • மருந்தை உண்டு பத்தியம் காவாதவன் வைத்தியரின் திறமையை வீணாக்குகிறான்.
  • மனிதனின் பெருமையும்,சிறுமையும் அவனவன் இதயத்துக்குள் இருக்கின்றன.
  • யார் தலைமயிர்தான் நிறம் மாறாமலிருக்கும்?
  • வயதுவந்த பெண் (தீர்வை கட்டாமல்) கடத்தி வந்த உப்பைப் போன்றவள். -சீனா (விரைவிலே வெளியேற்ற வேண்டும்.)
  • வயிற்றுப் பக்கம் நோயில்லையானால் நோயாளி இறக்க மாட்டான்.
  • வானத்திற்கு மணி சூரியன், வீட்டுக்கு மணி குழந்தை.
  • விதவை துடுப்பில்லாத மரக்கலம்.
  • விருந்தென்றால், வீடு நிறையக் கூட்டம்; உபவாச மென்றால், உலகமே திரும்பிப் பார்ப்பதில்லை.
  • வெளிச்சம் வருகிற சாளரத்தை அடைத்தல் வைத்தியர் வருவதற்குக் கதவைத் திறத்தலாகும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சீனப்_பழமொழிகள்&oldid=38023" இலிருந்து மீள்விக்கப்பட்டது