வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும்.

வறுமையைச் சாற்றும் சிறுவன்

மேற்கோள்கள் தொகு

  • தான் செல்வன் என்று அறியாதவனே வறிஞன். -பால் ரிச்சர்ட்[1]
  • உலக உடைமைகளை ஒரு பொருளாக மதியாதவரே உண்மையான செல்வர். -பால் ரிச்சர்ட்[1]
  • வறிஞர் என்பவர் கொஞ்சமாக உடையவர் அல்லர். அதிகமாக ஆசைப்படுபவரே யாவர். -ஆவ்பரி[1]
  • வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை. -கதே[1]
  • வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும். -பெர்னார்ட்ஷா[1]
  • வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது. -மாஜினி[1]
  • எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன். - ரஸ்கின்[1]
  • யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது. -செஸ்டர்ட்டன்[1]
  • வறிஞரே பாக்கியசாலிகள். ஏனெனில் அவரோடுதான் வறிஞர் எப்பொழுதும் வதிந்து கொண்டிருப்பதிலர். -செஸ்டர்ட்டன்[1]
  • செல்வமே வறுமைக்குக்காரணம், குவியல் உயர உயர குழி ஆழமாகிக்கொண்டே போகும். ஒருவனுடைய மிதமிஞ்சிய ஊண் மற்றொருவனுடைய பட்டினியாகும். -பால் ரிச்சர்ட்[1]
  • கிறிஸ்து வறுமையை ஒரு அறமாக வகுத்தார். கிறிஸ்தவர் அதை ஒரு குற்றமாகக் கருதுகின்றனர்; ஆனால் வருங்காலத்தவரோ செல்வத்தையே ஒரு குற்றமாக இகழ்வர். -பால் ரிச்சர்ட்[1]
  • இயேசு கூறும் அதர்மச் செல்வம் எது? அனைவர்க்கும் சொந்தமாயிராத சகல செல்வமும் அதர்மச் செல்வமேயாகும். -பால் ரிச்சர்ட்[1]
  • குறையாத செல்வமும் குலையாத சமாதானமும் கோழைகளைக் கோடிக்கணக்காய்ப் பெற்றுத்தள்ளும். வறுமையே என்றும் மனவுறுதியின் தாய். -ஷேக்ஸ்பியர்[1]
  • வறுமைதான் கலாதேவியின் பிதிரார்ஜிதம். - பர்ட்டன்[1]
  • வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே. - தாக்கரே[1]
  • நாணங்கொள்ள வேண்டிய விஷயம் . வறிஞனாயிருப்பதன்று, வறிஞனாயிருக்க நாணங்கொள்வதே. -பழமொழி[1]
  • அனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும். -ஜாண்ஸன்[1]
  • கலைஞன், கவிஞன், எழுத்தாளன் ஆகியோர் எப்போதும் வறுமையில் உழல்வதற்குக் காரணம் தம்மைப்பற்றி அவர்கள் சிந்திக்காததாலும், அவர்கள் வயிற்றைப் பற்றி உலகம் சிந்திக்காததாலுமேயாம்! —அரு. ராமநாதன்[2]
  • வறுமை கஷ்டமானதுதான் என்பதை நான் அறிவேன். ஆனால், புத்துச் சந்தர்ப்பங்களுள் ஒன்பதில், ஒரு வாலிபனுக்கு ஏற்படக் கூடிய முதன்மையான நன்மை என்னவென்றால், அவனைக் கப்பலிலிருந்து தண்ணீருள் தள்ளிவிடுவதுதான். அவன் மூழ்கினால் மூழ்கட்டும், தானே நீந்திக் கரையேறினால், ஏறட்டும். - கார்ஃபீல்டு[3]
  • ஏழைக்கு ஏழைகளைத் தவிர இரங்குவோர் சிலரே. லாண்டன்[3]
  • வறுமையால் ஏற்படும் பிணி ஒன்றுண்டு, தேவையினால் அது மனிதனைத் தீமை செய்யத் தூண்டும். - யூரிபிடிஸ்[3]
  • வறுமை, மனிதனுடைய ஊக்கம், பண்பு எல்லாவற்றையும் பறித்து விடுகின்றது. காலியுள்ள பை நட்டமாக நிற்க முடியாது. - ஃபிராங்க்லின்[3]
  • கிழிந்த கந்தல் துணிகளின் மூலம் சிறுசிறு கெட்ட பழக்கங்கள் நுழைந்து வந்துவிடுகின்றன. நீண்ட அங்கிகளும், உயர்ந்த உடைகளும் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிடுகின்றன. - ஷேக்ஸ்பியர்[3]

குறிப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை. நூல் 107- 108. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 311. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வறுமை&oldid=35776" இலிருந்து மீள்விக்கப்பட்டது