இரவீந்திரநாத் தாகூர்

வங்காளக் கவிஞர் மற்றும் தத்துவவாதி

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்டு 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

காந்தியடிகளுடன் தாகூர்

இவரது மேற்கோள்கள் தொகு

  • பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா தன்னுடைய அன்பையும் அறிவையும் கொண்டு வந்து சீனாவின் வாயிலில் நின்றபோது, பெளத்த ஆசாரியார்கள் உங்களுடன் சகோதர முறையில் சேர வந்தார்கள். அந்தப் பிணைப்பு இன்னும் இருக்கிறது. ஆனால் இப்போது அது சீன மக்கள் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்புப் போல் இருக்கிறது. பல நூற்றாண்டுகளின் அலட்சியத்தாலும் அடிமைத்தனம் காரணமாகவும் அந்தத் தொடர்பு இப்போது காடு மண்டிய வழிபோல ஆகிவிட்டது. ஆனால் அந்த உறவின் அடையாளங்கள் இப்போதும் காணக் கிடைக்கும். அத்த உறவுப் பிணைப்பை உறுதிப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன். — (12-4-1924) (சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில்)[1]
  • நாம் உலகத்தின் வெவ்வேறு இனங்கள். நமது சுயநலங்கள் வெவ்வேறானவை. ஆகையால் அந்த நிலையில் நாம் ஒன்றுபட முடியாது. ஆனால் அந்நிலைக்கு அப்பாலும் ஓர் உலகம் இருக்கிறது. அங்கே நம்முடைய நம்பிக்கைகளும், ஆசைகளும், திறமையும், பலனும் சமமானவை. அந்த நிலையில் உலகம் முழுதுமே மனித குலம் ஒன்று சேருமிடம் இங்குதான் கிழக்கும் மேற்கும் உண்மையிலேயே ஒன்று சேருகின்றன. எதிர் காலத்தில் சத்தியத்துக்காகவும் அன்புக்காகவும் பயணம் செய்பவர்கள் இளமையான ரோம் நகரத்தின் மனதில் ஆதரவு பெறும்படி என்னால் செய்ய முடிந்தால், நான் என்னை அதிருஷ்டசாலியாக எண்ணிக் கொள்வேன். (10-6-1926) (ரோம் பல்கலைக் கழகத்தில்)[2]
  • மனிதன் பிறக்கும்போது அந்தப் பிறப்பின் காரணமாகவே, தான் பிறந்த நாட்டின் பழங்காலம் முழுமைக்கும் வாரிசு ஆகிறான். கல்கத்தாவின் ஒரு மூலையில் பிறந்த நான் இந்தியாவின் செல்வத்திற்கு உடைமையாளனாக ஆகிவிட்டேன். அதே மாதிரி நமது சீன நண்பர்களும் சீன நாட்டு நாகரிகத்தின்மேல் உரிமை பெற்றிருக்கிறாள்கள். இந்திய நாட்டின் பண்டைய வரலாறும் நாகரிகமும் சீன நாட்டுடன் தொடர்புடையவை. — (24-7-1927) (சிங்கப்பூரில்)[3]
  • பாரதத்தைப் போன்ற பசியால் பீடிக்கப்பட்ட நாட்டில் யோசனையின்றி, வசதியாகப் பராமரிக்கும் சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்று, அவர்களை முடிவில்லாத கஷ்டத்திற்குள்ளாக்கி, குடும்பத்தையும் கீழ் நிலைக்குக் கொண்டு வருதல் கொடுமையானதொரு குற்றமாகும்.[4]
  • ஓர் இலையின் மேலுள்ள பனித்துளிபோல உனது வாழ்க்கை காலத்தின் விளிம்புகளில் நடனமாடிக்கொண்டிருக்கட்டும்.[5]

சான்றுகள் தொகு

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 312. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இரவீந்திரநாத்_தாகூர்&oldid=35801" இலிருந்து மீள்விக்கப்பட்டது