கருணாநிதி
தமிழக அரசியல்வாதி
முத்துவேல் கருணாநிதி, (M. Karunanidhi, இயற் பெயர்: தட்சிணாமூர்த்தி, பிறப்பு: ஜூன் 3, 1924 இறப்பு:ஆகத்து 7, 2018) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்தொகு
- மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!
- வீரன் சாவதே இல்லை... கோழை வாழ்வதே இல்லை.
- தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்.
- கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக் கூடாது.
- வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
- நான், நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொல்லும் போது தான் உதடுகள் கூட ஒட்டும்.
- மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டது.[1]